Wednesday 1 January 2014

கடைசிக் கடிதம்

விபரீத ஆசைகள்:
----------------------------
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அழகழகா வார்த்தையைப் போட்டு, பூ மாதிரி மென்மையா செதுக்கி செதுக்கி ஒரு காதல் கடிதமும், கண்ணீரைப் பிழிஞ்சு பிழுஞ்சு சோகமே உருவா ஒரு தற்கொலைக் கடிதமும் எழுதணும்னு. ஆனா பாருங்க காதல் கடிதம் எழுதும் அளவுக்கு யார் மேலயும் இது வரைக்கும் ஒரு 'இது' வந்ததில்லை. தற்கொலை பண்ற அளவுக்கு வாழ்க்கை வெறுத்தும் போகல.

காதல் கடித ஆசையை விட தற்கொலை
க் கடித ஆசை அதிகமாயிருந்தது. அந்த ஃபீல் எப்படியிருக்கும்ன்னு பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்.அந்த மனநிலையில் என்னவெல்லாம் மனதுக்குள் தோன்றும் என்று பார்க்க பயங்கர ஆவலாக இருந்தது.

நேத்தைக்கு ஒரு காதல் ஜோடி தற்கொலை, கடிதம் சிக்கியதுன்னு பேப்பர்ல போட்ருந்தது. அதிலிருந்து அந்தக் கடிதத்தில என்ன இருக்கும்ணு கற்பனை பண்ணிப் பார்க்கச் சொல்லி படுத்துது மனசு. அந்தக் காதலியா என்னை வைத்துச் சும்மா ட்ரை பண்ணுவோம்ன்னு எழுத ஆரம்பிச்சேன். (சும்மா விளையாட்டுக்குத் தான். நத்திங் சீரியஸ். பதட்டப்படாதீக)

இது ஒரு அசட்டுத்தனமான முயற்சி தான். ஆனால் என்னவோ எழுதச் சொல்லி மனசில் ஒரு குறுகுறுப்பு இழையோடுது.

அந்தக் கடிதம் கீழே! (எப்படியும் எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டுவீங்க. அதுக்குப் பயந்துக்கிட்டுத் தான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன். இன்னைக்கு என்னால என் ஆர்வக் குறுகுறுப்பைத் தாங்கிக்க முடியல. யாரும் மன ரீதியா இதால கஷ்டப்பட்டா ஸாரிங்க. இது முழுக்க விளையாட்டு புத்தியில் பண்றது தான். இப்பவும் சொல்றேன். நத்திங் சீரியஸ். குமுதா ஹேப்பி அண்ணாச்சி)

***

கடைசிக் கடிதம்!

அன்புள்ள அப்பா,

உங்கள் ராஜி கடைசியாய் எழுதுவது.

அப்பா, உங்களுக்கு நினைவிருக்கிறதா? எழுதப் படிக்கும் காலத்தில் எனக்கு ஆங்கில 'a' போட சுத்தமாய் வராது. அம்மாவும் நீங்களும் 'a' வடிவில் புள்ளி வைத்துக் கொடுத்து, அதைப் பென்சில் கொண்டு சேர்த்து எழுதச் சொல்வீர்கள். முதலில் பெரிய 'a', அடுத்து அதை விடச் சின்னதாய், அடுத்து அதை விட இன்னும் சின்னதாய், இரண்டு நாட்கள் புள்ளி பக்கத்தில் பக்கத்தில் வைத்து, அடுத்த நாளில் கொஞ்சம் தள்ளி வைத்து, படிப்படியாக புள்ளி சேர்க்காமல் நானாகப் பழகிக் கொண்டேன். அந்த நினைவுகள் மனதில் அடியாழத்தில் வெகு நாள் பிரிக்காத புத்தகத்தின் மங்கல் எழுத்தாய் நினைவில் நிற்கிறது.

நீங்கள் சொல்லித் தந்த போது இந்தக் கேள்வி எழவில்லை. ஆனால் இப்பொழுது தோன்றுகிறது. அது வெறும் 'a' மட்டும் தானா? வாழ்க்கை இல்லையா, அப்பா? அவை வெறும் புள்ளிகளா? உறவுகள் அல்லவா அப்பா? உறவுகளின் இருத்தலில் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சார்ந்து வாழ்ந்து, அவை இல்லாத போதும் வாழ்வை நகர்த்தச் சொல்லித் தந்தது அந்த 'a' அல்லவா?

இது நாள் வரை புள்ளிகள் இல்லாமல் வாழத் தெரியும் என்றிருந்தேன். ஆனால் இன்னமும் எனக்கு 'a' எழுத வரவில்லை அப்பா. ஆம்! அவரில்லாமல் வாழத் தெரியவில்லை.

உங்கள் மருமகனாய் அவரை ஏற்க உங்களுக்கு மனதில்லை. அவரைத் தவிர வேறு யாரையும் மணாளனாய் ஏற்க என்னால் முடியவில்லை. இப்பொழுதும் பாருங்களேன், இருவருக்கும் பிரச்சனை ஒன்றே ஒன்று! அது மனது!

அப்பா, உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு திருவிழா நாளின் கண்காட்சிக் கூடத்தில், நானும் அம்மாவும் டெல்லி அப்பளம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கோகி அங்கும் வந்து GEMSம் மிட்டாய் வேண்டும் என்று கத்திக் கூப்பாடு போட்டாள். சன்னமான அலைதலுக்குப் பின்னால், நீங்கள் வாங்கி வந்ததை ஒரு வாய் வைத்து விட்டு வேண்டாம் என்று அப்பளத்தைப் பிடுங்கி என்னை அழ வைத்தாள் அந்தக் குறும்பி. என்னை ஏய்ப்பதற்காக, GEMS மிட்டாயில் கலர் விளையாட்டு விளையாண்டோமே! உள்ளங்கைக்குள் அவற்றைக் கொட்டி வைத்து, ஆளுக்கொரு கலர் மனதில் நினைக்க, கண்ணை மூடி எடுக்கும் போது யார் நினைத்த கலர் வருகிறதோ அவர்களுக்கு அதைச் சாப்பிடக் கொடுப்பீர்கள். முதல் சுற்றிலேயே நான் நினைத்த கலரும் நீங்கள் நினைத்த கலரும் ஒன்றாய் இருந்து, அதை அன்பாய் நீங்கள் ஊட்டி விட்ட சுவை இன்னும் என் அடி நாவில் அமுதமாய் இனிக்கிறது அப்பா! அப்பொழுது எவ்வளவு பெருமையாய் இருந்தது தெரியுமா! அப்பா, இப்பொழுது மட்டும் ஏன் நாம் எதிரெதிர் நிறங்களைத் தேர்ந்தெடுத்தோம்?

காரணம்: நீங்கள் மாடர்ன் இல்லை என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாய் அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது. கடன் கழுத்தை அழுத்தியிருந்த சந்தர்ப்பங்களில், அம்மாவே கூட படிக்க வைக்க வேண்டாம் என்று மனம் மாற்றியிருந்த இருள்களில் கூட, எனக்காக தரப்பட்டியலையும், அண்ணா யுனிவர்சிட்டி அறிக்கையையும் கையில் வைத்துக் கொண்டு கனவு கண்டு கொண்டிருந்த நீங்கள் மாடர்ன் இல்லையென்று எப்படிச் சொல்வது? ஊரெல்லாம் சுற்றித் திரிந்து விளையாடும் பருவத்தில், எந்தத் தெருவில் விளையாடுவாய் என்று கேட்காமல் அனுப்பிய உங்களை எப்படி மாடர்ன் இல்லையென்று சொல்வது? தோற்று விட்டு அழுத முதல் பேச்சுப் போட்டி தினத்தன்று, வெற்றிகள் மட்டும் மகிழ்ச்சிகள் இல்லையென்று கற்பித்த உங்களை எப்படிச் சொல்வது மாடர்ன் இல்லையென்று?

அப்பா, நான் உங்களுக்கு தேவதை. எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் பிரச்சனை என்ன தெரியுமா? ஒன்றே குலம். அதற்கு ஒருத்தியே தேவதை என்று நீங்கள் வாழ்வது தான். அப்பா, அதில் என்னவனையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள முடியாததற்கு இது தான் காரணம்! தேவனாகக் கூட வேண்டாம். ஒரு பக்தனாகச் சேர்த்துக் கொள்ளும் மனம் இன்னமும் வராதது என் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச சாபம்!

வாழ்தல் இனிதென்று கற்றுத் தந்தவர் நீங்கள் தான்! உறவுகள் பெரிதென்று சொல்லித் தந்தவர் நீங்கள் தான்! உள்ளுணர்வுகள் உன்னதமானவை என்று புரிய வைத்ததும் நீங்கள் தான்! எல்லாம் எனக்குப் புரிந்த பின், அதன்படி நடக்காதே என்று இப்பொழுது சொல்வதை ஏற்க எனக்குத் தைரியமில்லை.

உங்களிடம் சண்டை பிடிக்க எனக்குத் தெரியாது, இது தான் வேண்டும் என்று கேட்டுப் பழக்கமில்லை. எனக்குப் பிடிக்காததை வாங்கித் தருவதும் உங்கள் வழக்கமில்லை. வழக்கத்திற்கு மாறாய் எதுவும் வேண்டாம் அப்பா! யாரும் அவரவர் குணத்திலிருந்து இறங்கி வர வேண்டாம். நான் இனி கேட்கப் போவதில்லை. கேட்பதற்கு இருக்கவும் போவதில்லை. என் வெற்றி உங்களைத் தோற்கடிக்குமானால் என்னால் அதை ஏற்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் என் தோல்விகளைத் தாங்கிக் கொண்டும் என்னால் வாழ முடியாது.

போகிறேன் அப்பா! வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட இடங்களுக்கு! காதல், அன்பு, பாசம் இவற்றை எல்லாம் கடந்த இடங்களுக்கு! வலிகள் இல்லாத ஒரு உலகத்திற்கு! திரும்பி வர வழிகள் இல்லாத கணங்களுக்கு!

எனக்காக அழ வேண்டாம் அப்பா! யதார்த்தம் எளிமையானது! உங்கள் வாழ்வில் இனி தேவதைகள் இருக்கப் போவதில்லை. வர்ணங்கள் இல்லாத வாழ்வு எனக்கு இனி இருக்கப் போவதில்லை. தேவதைகளைச் சிலுவையில் அறைய உங்களுக்கு உரிமை இருக்கிறது. அப்பொழுதும் அதைச் சிரிக்கச் சொல்லிக் கேட்டால் அது இயலாத ஒன்று.

போகிறேன் அப்பா! மொட்டை மாடி வெயில் என் பாதங்களுக்கு இளைப்பாறுதல் தரும். ஒற்றைச் சுருள் கயிறு என் சோகங்களை இழுத்துப் பிடிக்கும். நஞ்செனும் இனிப்பு என் குரல்வளைக்குள் குடியேறும். இதில் ஏதேனும் ஒன்றில் என் காயங்கள் கரையும்!

இப்படிக்கு,
இனி இல்லாத உங்கள் ராஜி

***

இந்தக் கடிதக்கரு கற்பனையானது தான்! ஆனாலும் ஏனோ எழுதி முடித்ததும் எனக்கு அழுகை வருகிறது! மரணங்கள் வெறும் சம்பவங்கள் என்று எப்படிச் சொல்வது?!

No comments:

Post a Comment